search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் முதலைகள் நடமாட்டம் - விவசாயி தோட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு
    X

    கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் முதலைகள் நடமாட்டம் - விவசாயி தோட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு

    கும்பகோணம் அருகே அணைக்கரையில் உள்ள விவசாயி தோட்டத்தில் முதலை புகுந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆறு, முதலைகள் நிறைந்த பகுதியாகும்.

    ஏராளமான முதலைகள், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கின்றன. கொள்ளிடம் ஆற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் செல்லும்போது ஆற்றுக்குள் இருக்கும் முதலைகள் வெளியே தென்படுவதில்லை.

    ஆற்றில் தண்ணீர் குறைந்து விட்டால் முதலைகள் தண்ணீரை தேடி, ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகி விட்டது.

    இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் அணைக்கரை விநாயகம் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று திடீரென ஒரு முதலை புகுந்தது.

    அந்த முதலை எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.

    இதுகுறித்து திருவிடைமருதூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பள்ளத்தில் இருந்து வெளிவர முடியாமல் போராடிக்கொண்டிருந்த முதலை மீது கயிற்றை கட்டி மீட்டு, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விட்டனர்.

    கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை ஊருக்குள் வர தொடங்கி இருப்பதால் ஆற்றங்கரையோர கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×