search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணி தீவிரம்
    X

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணி தீவிரம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது கரும்பு தான். கரும்பு, மஞ்சள், அரிசி போன்ற பொருட்கள் வைத்து பொங்கல் படி கொடுப்பது தமிழர்களின் பாரம்பரிய பழக்கம். அந்த பழக்கம் இன்றளவும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்பாகவே, திருமணமான பெண்களுக்கு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பொங்கல் படி வழங்குவார்கள். அதுவும் தலைப்பொங்கல் என்றால் ஏராளமான சீர்வரிசைகள் கொடுக்கப்படும். பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் தற்போது பலர் பொங்கல் படி கொடுத்து வருகிறார்கள்.

    ஈரோட்டை அடுத்த பி.பி.அக்ரஹாரம் அருகே உள்ள சமயசங்கிலியில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை கரும்புகள் விளையும். 400 கரும்புகள் தற்போது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை அன்று இந்த விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. சமயசங்கிலி பகுதியில் வெட்டப்படும் கரும்புகள் தற்போது குஜராத் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கரும்புகள் அங்கு சென்றுசேர 5 முதல் 6 நாட்கள் வரை ஆகும். அடுத்த வாரத்தில் இருந்து ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு கரும்புகள் வெட்டி அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×