search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
    X

    திருவாரூரில் ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

    திருவாரூரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    திருவாரூர்:

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    அதன்படி உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவை வணிகர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பது குறித்து திருவாரூர் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி உத்தரவின்படி, சுகாதார அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் தங்கராம் மற்றும் பணியாளர்கள் நேற்று நகரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 3 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து திருவாரூர் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி கூறியதாவது:-

    தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், வணிகர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×