search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
    X

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. #SupremeCourt #Sterliteplant #TNGovt
    சென்னை:

    தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர். தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.


    இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் 17‍-ந்தேதி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட‌து. இந்த வழக்கில் தங்களது கருத்தை அறியாமல் சுப்ரீம் கோர்ட் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt #Sterliteplant #TNGovt
    Next Story
    ×