search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா. ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது- கனிமொழி எம்பி பேச்சு
    X

    பா. ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது- கனிமொழி எம்பி பேச்சு

    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கனிமொழி எம்பி பேசினார். #kanimozhimp #thirumavalavan #pmmodi

    நெல்லை:

    பெரியாரின் 140-வது ஆண்டு விழாவையொட்டி பாளை நூற்றாண்டு மண்டபம் முன்பு மக்கள் கலை விழா நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்தியராஜ் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க வேண்டும் என்று கூறி வந்தார். அவருடைய கொள்கை தி.மு.க. ஆட்சியில் சட்டமாக கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

    ஆனால் இது தொடர்பாக இதுவரை நாடாளு மன்றத்தில் விவாதம் கூட நடத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா இயக்கங்கள் வளர்ந்துள்ளன. 10 ஆயிரம் கிளைகள் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தற்போது 57 ஆயிரம் கிளைகள் இருக்கின்றன.

    முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி விட்டனர். இந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இந்தியாவை பின்நோக்கி கொண்டு சென்று விட்டனர். மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மோடி ஆட்சிக்கு காவடி தூக்குகின்ற அ.தி.மு.க. ஆட்சிக்கும் விடை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-


    சிறுபான்மையான நாம் கடவுள் மறுப்பு கொள்கைகளை பற்றி பேசி வருகிறோம். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது கடவுள் பற்றி கருத்துக்கள் திணிக்கப்பட்டு உள்ளது.

    அனைத்து சாதிகளிடையும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவு இருக்கிறது. இந்த தீண்டாமை தடுப்பு சுவர் பல ஆண்டுகாலமாக இருக்கிறது. இந்த சமாதான கோட்பாட்டை தொடக்கத்தில் இருந்தே உருவாக்கி விட்டார்கள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனால் தான் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெரியார், அம்பேத்காரின் ஜனநாயக கோட்பாடுகள் வெற்றி பெற வேண்டும். இந்த கோட்பாடுகள் வெற்றி பெற்றால் சாதி, மத பேதம் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhimp #thirumavalavan #pmmodi

    Next Story
    ×