search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டை நிர்வகிப்பதில் மோடி தோல்வி அடைந்துள்ளார்- டி.ராஜா பேட்டி
    X

    நாட்டை நிர்வகிப்பதில் மோடி தோல்வி அடைந்துள்ளார்- டி.ராஜா பேட்டி

    நாட்டை நிர்வகிப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். #draja #pmmodi #indiacommunistparty

    பெருந்துறை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மூத்த தலைவர் பாண்டியன், மாநில செயலாளர் முத்தரசன், மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் தேசிய செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் மோடி அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. நாட்டினுடைய பொருளாதாரம் சீர்குலைந்து இருக்கிறது. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இந்தியாவில் மதச்சார் பற்ற ஒரு ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். மோடி தலைமையில் ஆட்சி அமைந்து ஐந்தாண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில், நாட்டினுடைய நிலைமையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டை நிர்வகிப்பதில் மோடி படுதோல்வி அடைந்திருக்கிறார்.

    மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கருப்பு பணம் பற்றி அவர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை.


    அதற்கு மாறாக தொழில்கள் முடங்கி போயிருக்கின்றன. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று உரிய புரிதல் இல்லாமல் அவர்கள் செயல்படுத்திய காரணத்தால் இன்றைக்கு சிறு குறு தொழில்கள் நொடிந்து போய் இருக்கின்றன. பலருக்கு வேலைவாய்ப்பு பறி போயிருக்கிறது.

    விவசாயத்துறை மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. விவசாயிகள் நாடு முழுவதும் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்கு உட்படுகிறார்கள். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றப்பட வில்லை.

    மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். பசுவின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கி இருக்கிறார்கள். எனவேதான் இன்றைக்கு நாடு காப்பாற்றப்பட வேண்டும்.

    இந்தியாவுடைய மதச் சார்பற்ற ஜனநாயக பன் முகத்தன்மை கொண்ட ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இவை நடைபெற வேண்டுமானால் பாரதீய ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டை ஆளும் கட்சி என்பது இன்றைக்கு மத்திய அரசின் கைகளுக்கு கட்டுப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. அதை அவர்களே பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்கள். மத்தியில் உள்ள மோடி ஆட்சியை நிபந்தனையற்று ஆதரிப்போம் என அவர்களே சொல்கிறார்கள்.

    அதனால் தமிழ்நாட்டின் உரிமை, நலன் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் ஒரு மாற்று மதச் சார்பற்ற ஜனநாயக ஆட்சி அமையவேண்டும். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் அமைக்க வேண்டும். இங்கு பாரதீய ஜனதா காலூன்ற இடம் இல்லை என்ற நிலையை தமிழ்நாட்டு மக்கள் நிரூபணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராஜா கூறினார். #draja #pmmodi #indiacommunistparty

    Next Story
    ×