search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான தி.மு.க. பிரமுகர் கணேசன், அவரது மனைவி மஞ்சுளா தேவி.
    X
    பலியான தி.மு.க. பிரமுகர் கணேசன், அவரது மனைவி மஞ்சுளா தேவி.

    கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

    கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். #KodaikanalFireAccident
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். அவரது மனைவி மஞ்சுளா தேவி (45). இவர்களது மகள் விஷ்ணு பிரியா (10). இவர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் தங்கி தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

    தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊருக்கு வந்திருந்தார். இவர்களது வீடு மலைப்பகுதியில் உள்ளது. எனவே காட்டு யானைக்கு பயந்து வீடானது தகர கொட்டகையால் வேயப்பட்டு இருந்தது. சுற்றிலும் மரப்பலகையால் அடைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு கணேசன் தனது குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கினார். இன்று காலை 6 மணி ஆனதும் மஞ்சுளா தேவி காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது சிலிண்டரில் உள்ள கியாஸ் கசிவாகி இருந்தது.

    இதை கவனிக்காத மஞ்சுளா தேவி நெருப்பை பற்றவைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் நெருப்பு பற்றியது.


    வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. எனவே அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தண்ணீரை எடுத்து நெருப்பை அணைத்தனர். ஆனால் வீட்டுக்குள் கணேசன், அவரது மனைவி மஞ்சுளா தேவி, மகள் விஷ்ணு பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்ததும் ஏராளமானோர் திரண்டனர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் எட்டியது. அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன கணேசன் அந்த பகுதி மக்களுக்கு பரிட்சயமானவர். எனவே அவர் இறந்ததால் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.  #KodaikanalFireAccident

    Next Story
    ×