search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிபாளையம் அருகே கோவில் விழாவில் கலைநிகழ்ச்சியை பார்த்த கட்டிட தொழிலாளி குத்திக் கொலை
    X

    பள்ளிபாளையம் அருகே கோவில் விழாவில் கலைநிகழ்ச்சியை பார்த்த கட்டிட தொழிலாளி குத்திக் கொலை

    கோவில் திருவிழாவில் கட்டிட தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). கட்டிட தொழிலாளி.

    அக்ரஹாரம் அருகே உள்ள கோட்டக்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்று வருகிறது.

    இவ்விழாவையொட்டி நேற்று இரவு கோவில் அருகில் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை மேடை முன்பு அமர்ந்து கோட்டக்காடு, அக்ரஹாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அதுபோல் கார்த்திகேயனும் மேடை முன்பு அமர்ந்து கலைநிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் (26) என்பவர் கார்த்திகேயன் காலை மிதித்து விட்டார்.

    இதனால் கோபம் அடைந்த கார்த்திகேயன் எப்படி நீ எனது காலை மிதிக்கலாம்? என கூறி கண்டித்தார். இதனால் பகத்சிங்குக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பகத்சிங் கத்தியை எடுத்து கார்த்திகேயனின் வயிற்றில் குத்தினார். பின்னர் அவரது கழுத்தில் ஓங்கி குத்தினார். இரண்டு இடங்களில் கத்திக் குத்து விழுந்த கார்த்திகேயன் அப்படியே சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார்.

    ஆனாலும் பகத்சிங் ஆத்திரம் அடங்காமல் வெறிபிடித்தவர் போல் மேடை ஓரமாக நின்று கொண்டிருந்தார். இந்த கத்திக்குத்து சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி அங்கும், இங்குமாக ஓடினார்கள்.

    பின்னர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திகேயனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் ஏற்றி பள்ளிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கார்த்திகேயன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் பகத்சிங்கை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட கார்த்திகேயனுக்கு நிர்மலா என்ற மனைவியும், சத்ய பிரியா என்ற மகளும், தமிழ்ச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். மகள், மகன் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் கார்த்திகேயன் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    Next Story
    ×