search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம் - அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு
    X

    புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம் - அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம் என்று கூறி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். #MGR #MGRMemorialDay
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர் எம்.ஜி.ஆர். சமாதியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-

    ஏழைக்கு இரங்குவதும், எளியோர்க்கு உதவுவதும் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட கடவுள் உள்ளம், கருணையின் ஊற்றாம் எம்.ஜி.ஆரின் உள்ளம் என்று சரித்திரம் சொல்லும். அத்தகைய மகத்தான மாமனிதர், காட்டிய பாதையில் வாழ்ந்து, அ.தி.மு.க.வை காத்திட உறுதி ஏற்போம்.

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

    ஏழை, எளியோரும், தாய்க்குலமும், நாளை உலகை ஆளப்போகும் தமிழ்ச் சந்ததியும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்நாளும் காப்போம், காப்போம்.

    புரட்சித்தலைவி அம்மாவை அடையாளம் காட்டிய எம்.ஜி.ஆர்., திராவிட இயக்க வரலாற்றின் நிகரில்லா மாதரசி புரட்சித்தலைவி அம்மாவை போல, புரட்சித் தலைவரின் இயக்கம் மக்களுக்கான மக்கள் இயக்கமாய் தொடர்ந்து தொண்டாற்றிட, துணை நிற்போம், துணை நிற்போம்.

    மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்-அமைச்சரான சரித்திர சிறப்புக்குரிய எம்.ஜி.ஆரைப் போலவே, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்ற தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மகத்தான மக்கள் செல்வாக்கால் வெற்றி சிகரத்தில் கழகத்தை வீற்றிருக்க செய்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா.

    கழகத்தின் கண்களாய் திகழும் நம் இருபெரும் தலைவர்களின் சாதனைகளை தொடரும் வகையில், வருகிற சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “எம்.ஜி.ஆருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்” என்றார். அதை ஏற்று தொண்டர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #MGR #MGRMemorialDay

    Next Story
    ×