search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்களை விரட்டியபோது கடலில் தவறி விழுந்த இலங்கை வீரர் - 7 பேர் மீது வழக்கு
    X

    தமிழக மீனவர்களை விரட்டியபோது கடலில் தவறி விழுந்த இலங்கை வீரர் - 7 பேர் மீது வழக்கு

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். அப்போது இலங்கை கடற்படை வீரர் கடலில் தவறி விழுந்தார். அவரை கடலுக்குள் தள்ளி விட்டதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #Fishermen #Srilankanavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்ககூடாது என மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகில் சோதனை செய்வதாக கூறி ஏறினர்.

    அப்படி ஏறும்போது கடற்படை வீரர் ஒருவர் தவறி கடலில் விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடலில் விழுந்த வீரரை, இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடினர்.

    ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்த சம்பவத்தால், மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு, மீனவர்கள் மாலையிலேயே ராமேசுவரம் துறைமுகம் திரும்பி விட்டனர்.

    அவர்கள் கூறுகையில், கடற்படை வீரர் கடலில் விழுந்ததால் இலங்கை கடற்படையினர் ஆத்திரம் அடைந்தனர். கச்சத்தீவு தலைமன்னார் உள்ளிட்ட கடல் பகுதிகளை வலம் வந்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, எங்களை (மீனவர்களை) விரட்டியடித்தனர்.

    இதனால் உயிர் பயத்தில் நாங்கள், பாதியிலேயே மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பி விட்டோம். இதுவரை கடலில் விழுந்த கடற்படை வீரரை மீட்டதாக தெரியவில்லை.

    எனவே இலங்கை கடற்படையினர் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள். நாங்கள் அடுத்தமுறை மீன் பிடிக்கச் செல்லும்போது எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்களோ? என்ற அச்சம் உள்ளது. மத்திய மாநில பாதுகாப்புத் துறையினர், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையில் இலங்கை கடற்படையில் இருந்து இந்திய கடற்படைக்கும், மீன்வளத்துறையினருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். அதில் கச்சத்தீவு அருகே டி.என்.10 எம்.எம்.364 என்ற பதிவு எண் கொண்ட தமிழக விசைப்படகு நேற்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. அந்த படகில் 7 மீனவர்கள் இருந்தனர். அவர்கள், படகிற்குள் சோதனைக்கு சென்ற எங்கள் வீரரை (இலங்கை கடற்படை வீரர்) கடலுக்குள் தள்ளி விட்டனர். இது குறித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்கள் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு மீனவர்கள் விரட்டியடிப்பு, கடலில் விழுந்த வீரரை தேடும் பணி போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #Fishermen #Srilankanavy

    Next Story
    ×