search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
    X

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
    காஞ்சீபுரம்:

    108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள்கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், கவிதா உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    இதேபோல் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி குலசேகரஆழ்வார் ராமானுஜா அறக்கட்டளை சார்பில் வைணவ பக்தர் கிருஷ்ணராமானுஜர் தாசர் விழாவில் கலந்து கொண்ட 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் செய்திருந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பள்ளிப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதநாராயண சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதே போல திருவள்ளூர் பூங்காநகரில் உள்ள ஜலநாராயண சாமி கோவில் மற்றும் பேரம்பாக்கம் கமலவள்ளி சமேத வைகுண்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×