search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    ஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று கொண்டார். கூட்டத்தில், கரூர் அருகே ஏமூர் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட 3 ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் பொதுமக்கள் வயல்வெளியிலுள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் 1,250 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த நவம்பர் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்டவற்றின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு பெற தவறியதால் தாமதம் ஏற்படுவதாக கூறுகிறார். இதனால் வீட்டு வாடகை செலுத்துவது, மளிகை சாமான் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பணம் இல்லாமல் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத சம்பளத்தை வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி-மேலப்பாளையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலப்பணிகள் நடந்தன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த போதும், மீதிப்பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டனர். எனவே அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வீரராக்கியம் ரெயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால், அங்குள்ள ஊர்களுக்கு பொதுமக்கள் தடையின்றி செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் வேலை செய்யும் செவிலியர் உதவியாளர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் செவிலியர் உதவியாளருக்கான 2 ஆண்டு டிப்ளமோ படிப்பினை படித்து முடித்து விட்டு தான் மருத்துவமனைகளில் வேலை செய்கிறோம். எனினும் நாங்கள் படித்த படிப்பின் சான்றிதழ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் ஏற்று கொள்ளாத நிலை உள்ளது. இதனால் அரசு வேலை உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மத அடையாள கோவில் கட்டப்படுகிறது. மத அடையாளங்கள் அரசு அலுவலகங்களில் இருக்க கூடாது என்கிற உத்தரவினை மீறும் வகையில் உள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட சமநீதி கழகத்தினர் மனு கொடுத்தனர்.

    மண்மங்கலம் நடையனூரை சேர்ந்த முன்னாள் நிலஅளவை துறை ஊழியர் அர்ச்சுனன் (வயது 55) அளித்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு பணிநீக்கம் செய்து விட்டனர். இது குறித்து விசாரித்து மீண்டும் எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், குடும்பர், பண்ணாடி என அழைக்கப்பட்ட பிரிவினை ஒன்று சேர்த்து தேவேந்திர குலவேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆண்டாண்டு காலமாக தாங்கள் விவசாயம் செய்து வருவதை காட்டும் விதமாக நெற்பயிருடன் வந்து தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் சிலரும் மனு கொடுத்தனர்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மடக்குகோல் மற்றும் கருப்பு கண்ணாடி, மடக்கு சக்கர நாற்காலி மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி என ரூ.26,150 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் தேசிய அளவில் தமிழக அணியில் இடம் பெற்று புனேயில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×