search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத்தில் மீன் வியாபாரி அடித்துக்கொலை- ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
    X

    நாசரேத்தில் மீன் வியாபாரி அடித்துக்கொலை- ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்

    நாசரேத்தில் மீன் வியாபாரியை அடித்துக்கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஞானராஜ் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது45). இவர் நெல்லையில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பன்னீர்செல்வம் (44). இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். ஆனந்த ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து ஆனந்தராஜ் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ராஜா தேசிங்கு (37) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று ஆனந்தராஜ் அப்பகுதியில் உள்ள தனது சகோதரி சகுந்தலா வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டின் முன்பு ஆனந்தராஜ், சகுந்தலா, அவரது கணவர் ஞானசேகர் ஆகிய 3 பேரும் பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ராஜாதேசிங்கு இங்கு நின்று எப்படி பேசலாம் என ஆனந்தராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜா தேசிங்கு இரும்பு கம்பியால் ஆனந்தராஜின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    இதை தடுக்க வந்த சகுந்தலா மற்றும் ஞானசேகரையும், ராஜாதேசிங்கு பயங்கரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த சகுந்தலா மற்றும் ஞானசேகரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ராஜா தேசிங்கை வலைவீசி தேடி வருகின்றனர். மீன் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×