search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: தூத்துக்குடியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: தூத்துக்குடியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு

    தூத்துக்குடியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SterliteProtest #NGT

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தூத்துக்குடி மக்களிடைய கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு சார்பிலும் இதை எதிர்த்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    நேற்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், தருண் அகர்வால் குழு அறிக்கையில் கூறிய பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் அமல்படுத்த வேண்டும், ஆலையின் கழிவுகளை வெளியேற்ற மத்திய மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நெறிமுறைகள் உருவாக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பித்து 3 வாரங்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.

     


    மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் தொடரும் வகையில் மீண்டும் மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு தூத்துக்குடி மக்களிடையே கடும் அதிர்ச்சி மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டமான நிலை உருவாகி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், நகர மத்திய வியாபாரிகள் சங்கம், மாவட்ட நாட்டுபடகு கட்டுமர மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய அ.குமரெட்டியாபுரம், பண்டாரபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்கள்.

    இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    எதிர்ப்பாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டால் அதனை தடுத்து கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா, தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்கும் வருண் போன்ற கலவர தடுப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1800 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். தேவைப்பட்டால் வெளி மாவட்ட போலீசாரும் வர வழைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் தூத்துக்குடி நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் மற்றும் பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றிவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேறு பணிகளுக்கு சென்ற போலீசார் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். #SterliteProtest #NGT

    Next Story
    ×