search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் வழக்கு- முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
    X

    குட்கா ஊழல் வழக்கு- முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரமணா இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #GutkhaScam #CBI #Vijayabaskar #Ramana
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

    ஆனாலும் தமிழகத்தில் குட்கா தொடர்ந்து ரகசியமாக விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள குட்கா உற்பத்தி ஆலைகள் மற்றும் குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின் போது டைரி ஒன்று சிக்கியது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், அப்போதைய புழல் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், அப்போதைய செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

    அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.40 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு முதலில் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்த வழக்கில் குட்கா தயாரிப்பு நிறுவன அதிபர் மாதவராவ், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.


    இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் 2 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போதே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

    இந்தநிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கும் சி.பி.ஐ. போலீசார் நேற்று சம்மன் அனுப்பினார்கள்.

    அந்த சம்மனில் அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆஜர் ஆகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

    அந்த சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் ரமணா இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலையில் ஆஜராகிறார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்படும்.

    குட்கா வழக்கில் இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்தது. இப்போது புதிய திருப்பமாக அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    அடுத்த கட்டமாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI #Vijayabaskar #Ramana
    Next Story
    ×