search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டியவர் ஜெயலலிதா- செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதிலடி
    X

    தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டியவர் ஜெயலலிதா- செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதிலடி

    தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர் ஜெயலலிதா என்று செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். #SenthilBalaji #MRVijayaBaskar
    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.ம.மு.க.வை சேர்ந்த பலர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அ.ம.மு.க.வில் இருந்து விலகி தாய் கழகமான அ.தி.மு.க.வில் தொண்டர்கள் பலர் தங்களை பெருந்திரளாக இணைத்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. கரை வேட்டியை கழற்றி விட்டு, மாற்று உடுப்பாக தி.மு.க. வேட்டியை கட்ட நாங்கள் தயாராக இல்லை என அவர்கள் தெரிவித்தது பெருமிதமாக உள்ளது.

    கரூர் மாவட்டத்திலிருந்து அ.ம.மு.க.வை வழிநடத்துகிறேன் என்று சொன்ன ஒருவர் (செந்தில்பாலாஜி), உங்களையெல்லாம் விட்டு விட்டு பதவிக்காக தி.மு.க.வுக்கு சென்று விட்டார். தமிழகத்தின் உரிமை பறிபோகிறது என சொல்லி அவர் (செந்தில் பாலாஜி), அந்த கட்சிக்கு (தி.மு.க.) போய் பாதுகாக்க போகிறாரா?. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஜெயலலிதா. முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலே நீதிமன்றத்தை நாடி உரிமையை நிலைநாட்டியவர் அவர்.


    அதே வழியில் பயணிக்கும் நாங்கள் எந்த வகையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனை முதல்-அமைச்சர் ஆக்குவோம் என கூறி வந்தார். அதற்கு முன்னர் போக்குவரத்து துறை அமைச்சராக அவர் இருந்த போது, உயிருள்ளவரை ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி விசுவாசமாக இருப்பேன் என கூறினார். இந்த நிலையில் திடீரென அவர் தி.மு.க.வுக்கு தாவியிருப்பது எதற்காக? என்பது அனைவருக்கும் தெரியும்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எந்த இயக்கத்தை எதிர்த்தனரோ, அதில் போய் அவர் ஐக்கியமாகியிருப்பது அவரது தாய்கழகமான தி.மு.க.வில் இணைந்தது போல் உள்ளது. தற்போது அ.ம.மு.க. என்பது பீஸ் போனது போல் ஆகி விட்டதாக தெரிகிறது. அதைவிட்டு ஐ-வோல்ட் மின்சாரம் என டி.டி.வி. தினகரன் கூறுவது நகைப்புக்குரியது. 1½ கோடி தொண்டர்களுடன் அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாக உள்ளது.

    இதிலிருந்து உண்மை தொண்டர்கள் ஒருவரும் மாற்று கட்சிக்கு செல்லவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறும் வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் களப்பணி சீரிய முறையில் இருக்கும். அ.தி.மு.க. மூழ்கும் கப்பலா? என்ற விமர்சனத்துக்கு வெற்றிகனியை பறித்து பதில் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SenthilBalaji #MRVijayaBaskar
    Next Story
    ×