search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்
    X

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார். #StudentSuicide
    மாதவரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வடக்கு பாளையம் அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது மகள் செண்பக தேவி(வயது18). இவர் மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை செண்பக தேவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உடன் தங்கி இருக்கும் மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் கல்லூரி முடிந்து மாணவிகள் திரும்பி வந்தபோது விடுதி அறையில் செண்பகதேவி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செண்பகதேவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே செண்பக தேவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை முத்துகிருஷ்ணன் மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    மகள் செண்பகதேவியை கடந்த 31-10-2018 அன்று அரசு தோட்டக்கலை கல்லூரியில் டிப்ளமோ தோட்டக்கலை துறையில் சேர்த்தேன்,

    கல்லூரியில் சேர்ந்து 43 நாட்களில் பலமுறை கல்லூரியை பற்றியும், கல்லூரியின் நிர்வாகம் மற்றும் அந்த துறை சார்ந்தவர்களை பற்றியும் பலமுறை எண்ணிடம் பகிர்ந்து கொள்வாள்.

    விடுதி காப்பாளர் மூன்றாம்பிறை என்பவர் தினமும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருவதாக கூறுவாள். மேலும் சக மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளை சொல்லி திட்டி அனைவருக்கும் முன்பு முட்டிபோட வைப்பதாகவும் தெரிவித்தாள். அங்கு நடக்கும் கொடுமைகளை பற்றியும் அவ்வப்போது என்னிடம் கூறி வந்தாள்.

    இந்தநிலையில் செண்பக தேவி தற்கொலை செய்து இருப்பதாக தெரிவித்தனர். அவளது சாவில் சந்தேகம் உள்ளது. கல்லூரியின் நிர்வாகத்தினர் மற்றும் விடுதி காப்பாளர் மூன்றாம் பிறை ஆகியோரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி விடுதி காப்பாளரான ஆவடியை சேர்ந்த மூன்றாம் பிறையிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.

    ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாணவி செண்பகதேவி தற்கொலை செய்ததையடுத்து தோட்டக்கலை கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி இருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentSuicide

    Next Story
    ×