search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி கொலையில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது
    X

    செய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி கொலையில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது

    செய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழநட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குரு (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வருவார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு குரு வீட்டிற்கு வந்தார். இரவு 10 மணி அளவில் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல வீட்டின் வாசலில் வந்து நின்றார்.

    அப்போது, மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென்று குருவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதில் குருவின் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த குரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குரு எதற்காக கொலை செய்யப்பட்டார்? குருவை கொலை செய்த கும்பல் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முத்தையாவின் மகன்கள் துரை, மாசிலாமணி மற்றும் உறவினர் செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட குருவுக்கும், துரை உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் செல்லத்துரையை குரு கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த செல்லத்துரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர்களுக்கிடையே தொடர்ந்து விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் குருவின் மனைவி துரை உள்ளிட்ட 3 பேர் மீதும் மீண்டும் போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அடுத்தடுத்து பிரச்சினை காரணமாக 3 பேரும் குரு மீது ஆத்திரத்தில் இருந்தனர். இதனால் குருவை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையறிந்த குரு தனது மாமனார் ஊரான நொச்சிகுளத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் ஊருக்கு வந்தபோது துரை உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி துரை, அவரது தம்பி மாசிலாமணி, செல்லத்துரை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் செல்லத்துரையை கத்தியால் குத்தியதோடு, தொடர்ந்து எங்கள்மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் வெட்டிகொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செய்துங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலை செய்யப்பட்ட குருவுக்கு, உஷா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×