search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளி வெட்டி சாய்ப்பு- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்
    X

    சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளி வெட்டி சாய்ப்பு- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்

    சேலத்தில் இன்று முன்விரோத தகராறில் வெள்ளி பட்டறை தொழிலாளியை வெட்டி சாய்த்த மனைவியின் கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் குகை, பாபுநகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 38). இவர் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர், தனது உறவினரான சேலம் பட்டைக்கோவில், குமரன் தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் சாந்தாராமனிடம் (30) இருந்து ரூ. 40 ஆயிரம் கடனாக கந்து வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

    சாந்தாராமன் குகை லைன்ரோடு கறிக்கடை வீதியில் உள்ள ஒரு கறிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த கறிக்கடை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே உள்ளது.

    வழக்கம்போல் இவரும், கோபிநாத்தும் கறிக்கடை வீதி அருகே உள்ள அம்பலவானர் தெருவில் இருக்கும் ஒரு டீக் கடையில் டீ குடிப்பது பழக்கம். அப்போது வட்டி பணம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாந்தாராமுக்கும், கோபிநாத்தின் மனைவி கமலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    கோபிநாத்தை தீர்த்துக்கட்ட சாந்தாராமன் முடிவு செய்தார். அதன்படி இன்று காலை அவர் கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு வழக்கமாக சந்திக்கும் டீக்கடை முன்பு காத்திருந்தார்.

    அப்போது அவர் செல்போனில் தொடர்பு கொண்டு, தான் அம்பலவானர் தெருவில் உள்ள டீக்கடையில் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கோபிநாத்திடம் கூறினார்.

    இதையடுத்து கோபிநாத் அந்த டீக்கடைக்கு சென்றார். அங்கிருந்து சாந்தாராமன் தான் கொடுத்த ரூ.40 ஆயிரம் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடு என்று கேட்டார்.

    அதற்கு கோபிநாத் தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறவே, டீக்கடை பக்கத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் இருந்து வெட்டுவதற்கு கத்தியை எடுத்தார்.

    இதை பார்த்ததும் கோபிநாத் அங்கிருந்து ஓடினார். ஆனால் சாந்தா ராமன் அவரை விடாமல் விரட்டிச் சென்று ஓட ஓட வெட்டினார். முதலில் முகத்தில் ஓங்கி வெட்டினார்.

    முகத்தில் இருந்து மளமளவென ரத்தம் வழிந்த நிலையில் கோபிநாத் வலியால் அலறினார். பின்னர் காது, முகம், வாய், கை உள்ளிட்ட இடங்களில் ஓங்கி வெட்டினார். மேலும் சாந்தா ராமன் ஆத்திரம் அடங்காமல் கோபிநாத்தின் இடது கையை வெட்டினார். இதில் கோபிநாத்தின் இடது கை தொங்கியது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கொலை வெறி தாக்குதல் நடத்திய கறிக்கடை தொழிலாளி சாந்தாராமன் கத்தியுடன் நேராக சென்று செவ்வாய்ப் பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கமலாவுடனான கள்ளத் தொடர்பு தகராறு காரணமாக ஏற்கனவே கோபிநாத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாந்தாராமை ஆள் வைத்து தாக்கியதும், இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் தற்போது கோபிநாத்தை, அவர் வெட்டி சாய்த்ததும் தெரிய வந்தது.

    கமலாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி மஞ்சு பாஷினி (18), தர்ஷினி(14), என்ற 2 மகள்கள் உள்ள நிலையில் கோபிநாத் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா (11) என்ற மகளும் உள்ளார்.

    கமலாவுடன் போலீசார் விசாரித்த போது, பிறந்த குழந்தைகளை கழுவும் வேலைக்கு சென்று வந்த எனக்கு எனது மாமா மகனான சாந்தாராமுடன் முன்பு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அழைத்து செல்வார் என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×