search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை- வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    திருவண்ணாமலை- வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

    திருவண்ணாமலை- வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் பள்ளி மாணவிகள் 3 பேர் திருமணம் தடுத்து நிறுத்தபட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனை தடுக்க சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் செய்ய கூடாது.

    இதுபற்றி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 27), எலக்ட்ரீசியன். இவருக்கும் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயம் செய்திருந்தனர். அதன்படி சிலம்பரசனின் திருமணம் இன்று சேத்துப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.

    இதற்காக இருவீட்டாரின் உறவினர்களும் நேற்று இரவு திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். பெண் அழைப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மணமகளுக்கு 18 வயது ஆகவில்லை என்று சைல்டு லைனுக்கு, வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊர்நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அவர் திருமணம் நடக்க இருந்த திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாகவும், சான்றிதழ் இல்லையென்றும் கூறினர்.

    ஆனால் 18 வயது ஆகவில்லை என்பது உறுதியாக தெரிந்ததால் மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோரை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி 18 வயது ஆவதற்கு முன்பு திருமணம் நடத்த மாட்டோம் என்று எழுதி வாங்கி அனுப்பினர்.

    இதனால் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோல சாவல்பூண்டியில் 17 வயதான 12-ம் வகுப்பு மாணவிக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இது பற்றி தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினாடார்த்தி சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது மாணவிக்கு பூப்புனித நன்னிராட்டு நடத்துகிறோம் என்றனர்.

    சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் மாணவிக்கு திருமண ஏற்பாடு நடந்தது தெரியவந்தது. திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என மாணவியின் பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது மாவட்ட நீதிபதி மகிழேந்தி அங்கு வந்தார். அவர் மாணவியை காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் ஆதரவற்ற இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    செய்யாறு அருகே மாணவி ஒருவருக்கு நேற்று திருமண ஏற்பாடு செய்தனர். இதுபற்றி தகவலறிந்த செய்யாறு தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியில் குருபானிகுண்டா பகுதியை சேர்ந்த ஆனந்தன் (33) என்பவருக்கும் திருணம் நிச்சயம் செய்யபட்டது.

    அதன்படி ஆனந்தனுக்கு இன்று நாட்டறம்பள்ளி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நடக்க இருந்தது. இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என்று நட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து குமார் மற்றும் அதிகாரிகள் திருமண மண்படத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.

    Next Story
    ×