search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபிராமபுரத்தில் பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து செல்போன் பறிப்பு
    X

    அபிராமபுரத்தில் பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து செல்போன் பறிப்பு

    அபிராமபுரத்தில் பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கின்றன.

    சென்னை ஆழ்வார்பேட்டை பீமன் கார்டன் பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் பையா உலாங்கு. மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான இவர் இங்கு தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று மாலை வேலை முடிந்து தான் தங்கி இருக்கும் இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த வாலிபர்கள் சிலர் பையா உலாங்குவின் முகத்தில் மயக்க ஸ்பிரேவை அடித்தனர்.

    இதில் மயங்கி விழுந்த அவரிடமிருந்து செல்போனை பறித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள் அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் மணிகண்டன், யோகேஷ் ஆகிய 3 பேரே செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் மேலும் பல இடங்களில் 3 பேரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ், ராயப்பேட்டையைச் சேர்ந்த அரிபிரகாஷ், கோட்டூர் புரம் தினேஷ், தேனாம்பேட்டை ரவி, குரியன், கோயம் பேட்டைச் சேர்ந்த விஜயகுமார், அபிராமபுரம் செல்வராஜ், அடையாறு விஸ்வா, அம்பத்தூர் குமரரேசன் ஆகியோரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

    குமரன் நகர் பகுதியிலும் 2 பேரிடம் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

    திருட்டு செல்போன்களை வாங்கும் வியாபாரிகளின் கடைகளில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் திருட்டு செல்போன்களை வாங்கியவர்களும் பிடிபட்டனர். இருப்பினும் செல்போன் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    Next Story
    ×