search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை காந்திவீதியில் ஜவுளிக்கடையில் திருடிய கேரள வாலிபர்கள் சிக்கினர்
    X

    புதுவை காந்திவீதியில் ஜவுளிக்கடையில் திருடிய கேரள வாலிபர்கள் சிக்கினர்

    புதுவை காந்திவீதியில் ஜவுளிக்கடையில் புகுந்து ஜவுளி வகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருமலை நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது28). இவர் புதுவை காந்திவீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் இளவரசன் ஜவுளிக்கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் இளவரசன் ஜவுளிக்கடையை திறந்து வியாபாரம் செய்ய வந்தார்.

    அப்போது ஜவுளிக்கடையில் ரூ.25 ஆ யிரம் மதிப்புள்ள பேண்ட், சர்ட் மற்றும் டிசர்ட்டுகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.1500 ரொக்க பணமும் காணவில்லை. இவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து இளவரசன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜவுளிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் ஜவுளிக்கடையையொட்டி உள்ள ஆலமரத்தின் வழியாக ஏறி ஷோரூம் கண்ணாடியை உடைத்து ஜவுளி வகைகளையும். பணத்தையும் திருடி சென்றிருப்பது பதிவாகி இருந்ததை கண்டனர்.

    இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாலை 2 வாலிபர்கள் ஒரு பெரிய துணி மூட்டையுடன் தலைச்சுமையாக ரெயில் நிலையம் நோக்கி வந்ததை ஓதியஞ்சாலை போலீசார் கண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த துணிமூட்டையை சோதனையிட்டனர். அதில் புத்தம் புதிய பேண்டு, சட்டைகள், டீசர்ட்டுகள் இருந்தது.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த ஜேவியர்அஜய் (21) மற்றும் பெஞ்சமின் ஜோசப்(18) என்பதும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவையில் நண்பரை காண வந்த இவர்கள் ஒரு ஓட்டலில் அறைஎடுத்து தங்கி பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் மதுகுடித்த இவர்கள் குடிபோதையில் ஜவுளிக்கடையில் புகுந்து ஜவுளி மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜவுளி வகைகள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×