search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
    X

    கூடலூர் அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

    கூடலூர் அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் கலப்பட தேயிலைத்தூள் தயாரிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை குழுவினர் கூடலூர் பகுதிக்கு நேற்று மாலை வந்தனர்.

    பின்னர் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி கம்மாத்தியில் செயல்படும் ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினர். அப்போது உரிமம் புதுப்பிக்காமல் தொழிற்சாலையை நடத்தி வருவது தெரியவந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அதில் உரிமம் புதுப்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து தொழிற்சாலையில் இருந்து தேயிலைத்தூள் மாதிரியை பரிசோதனைக்காக சேகரித்து கொண்டனர். அதன்பிறகு உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:-

    மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உரிமம் புதுப்பிக்காமல் தொழிற்சாலை இயங்குவது தெரியவந்தது. மேலும் குறைந்த அளவு பச்சை தேயிலையை வைத்து தேயிலைத்தூள் தயாரிக்கப்பட்டு வந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் மாதிரி பரிசோதனைக்காக சிறிது தேயிலைத்தூளை சேகரித்து வைத்துள்ளோம். இதன் பரிசோதனை அறிக்கை விவரம் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மண்வயல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சி.கே.மணி கூறியதாவது:-

    இந்த பகுதி விவசாயிகள் யாரிடமும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் பச்சை தேயிலை கொள்முதல் செய்யவில்லை. எனவே விவசாயிகள் விவரமும் தொழிற்சாலையில் கிடையாது. மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. உரிமத்தை புதுப்பிக்காமல் தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×