search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே வீட்டில் புகுந்து நகை- பணம் கொள்ளை
    X

    தவளக்குப்பம் அருகே வீட்டில் புகுந்து நகை- பணம் கொள்ளை

    தவளக்குப்பம் அருகே வீட்டில் புகுந்து நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினையும் பறித்து சென்று விட்டனர்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பங்கஜம் நகரை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி அஞ்சலைதேவி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் 2 மகன்கள் வெளி நாட்டில் வேலை செய்து வருகின்றனர். பலராமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அஞ்சலைதேவி தனது மற்றொரு மகனான சாப்ட்வேர் என்ஜினீயரான முரளியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அஞ்சலைதேவி வீட்டின் கீழ் தளத்திலும், முரளி தனது மனைவியுடன் வீட்டின் மாடியிலும் தூங்கினர்.

    நள்ளிரவில் மர்ம வாலிபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்து பார்த்துள்ளனர்.

    அதில் நகை- பணம் எதுவும் இல்லாததால் பூஜை அறைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

    பின்னர் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டு இருந்த அஞ்சலைதேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த அஞ்சலைதேவி திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.

    தாயார் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் முரளி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கொள்ளையர்கள் வயல் வெளியில் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோன்று திருட்டு, கொள்ளை சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி மேற் கொள்ளாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    Next Story
    ×