search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி இளம்பெண்ணை சீரழித்த இளைஞர்கள்- வக்கீல்கள் ஆஜராக மறுப்பு
    X

    டெல்லி இளம்பெண்ணை சீரழித்த இளைஞர்கள்- வக்கீல்கள் ஆஜராக மறுப்பு

    டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கும்பகோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தினேஷ், அன்பரசு, வசந்த், புருசோத்தமன் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். #kumbakonamdelhigirlmolestation

    கும்பகோணம்:

    டெல்லி பெண்ணை 4 வாலிபர்களும் மிக கொடூரமாக இரக்கமற்ற முறையில் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து வந்த அந்த பெண் எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார்.

    சென்னையில் இருந்து புறப்பட்டதும் ஏற்கனவே கும்பகோணத்தில் தங்கி பயிற்சி பெற்றுவரும் சக தோழிகளிடம் தான் வரும் விபரத்தை சொல்லி டூவீலரில் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்.

    இரவு 10.20 மணிக்கு கும்பகோணத்தில் இறங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அந்த பெண்களால் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடிய வில்லை. அவர்களிடம் ஓட்டல் முகவரியை வாங்கி ஆட்டோவில் செல்ல முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில் ரெயில் நிலையத்தில் ஆட்டோக்கள் இல்லை. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டோ பயணிகளை இறக்கிவிட்டது.

    அந்த ஆட்டோ டிரைவரிடம் சென்று கேட்டுள்ளார். அவர் அந்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். அந்த பெண் செல்ல வேண்டிய ஓட்டல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1½கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாகியும் ஆட்டோ ஓட்டலை சென்றடைய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் கத்தி இருக்கிறார்.

    உடனே அந்த ஆட்டோ டிரைவர் செட்டிப்பள்ளம் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார். நள்ளிரவில் நடு ரோட்டில் தவித்த அந்த பெண் டிராலிபேக்கை இழுத்தபடி நடந்து சென்றுள்ளார்.


    தன்னந்தனியாக வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் வந்ததைப் பார்த்ததும் தினேஷ் அருகில் சென்று அந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் ஓட்டல் விலாசத்தை கூறியதும் நாங்கள் கொண்டுவிடுகிறோம் என்று கூறி இருக்கிறான். அதை நம்பி அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி இருக்கிறார். அதே பைக்கில் வசந்தும் ஏறிக்கொண்டான்.

    நம்பி சென்ற இளைஞர்கள் இப்படி நாசம் செய்வார்கள் என்று அந்த பெண் நினைக்கவில்லை. இவர்கள் 4 பேரும் படித்த வேலை இல்லாத இளைஞர்கள். தினேஷ் மட்டும் வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலை செய்கிறார்.

    அன்று இரவு ஒரு குவார்ட்டர் பாட்டில் மதுவை வாங்கி 4 பேரும் குடித்து விட்டு, கஞ்சா புகை பிடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறி இருந்த நேரத்தில் தான் டெல்லி பெண் அவர்களிடம் சிக்கி இருக்கிறாள்.

    ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்குள் கொண்டு சென்று குண்டும் குழியுமாக கிடந்த ரோட்டில் வைத்து அந்த பெண்ணை 4 பேரும் சித்ரவதை செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே மாத விடாய் வலியால் தவித்த அந்த பெண் நாலு மிருகங்களிடமும் கதறி இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு இரக்கம் வரவில்லை.

    இரவு 12.15 மணி முதல் 2.15 மணி வரை குரூரமாக நடந்து இருக்கிறார்கள். உடலில் ரத்தம் வழிய துடித்த அந்த பெண்ணை ஆடைகளை சரி செய்ய சொல்லி அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டுள்ளார்கள்.

    அப்போது தினேஷ் ஒரு மொபைல் எண்ணை ஆட்டோ டிரைவரிடம் சொல்லி அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறான்.

    அந்த எண்ணை அந்த பெண் மனப்பாடம் செய்து கொண்டார். செல்போனில் தொடர்புகொண்ட அந்த நபர் வந்ததும் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று ஓட்டலில் இறக்கி விட்டுள்ளார்கள்.

    அப்போது நடந்த விபரங்களை வெளியே சொன்னால் இங்கு வேலை பார்க்க முடியாது. தொலைத்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

    நள்ளிரவில் ரத்த காயங்களுடன் வந்து நின்ற தோழியை பார்த்து நடந்த விபரங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக டெல்லியில் உள்ள வங்கி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரித்து இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் நடந்த விபரங்களை கேள்விப்பட்டு டெல்லியில் இருந்து அவரது தந்தை கும்பகோணத்துக்கு விரைந்து வந்தார். நடந்த விபரங்களை சொல்லி தந்தையிடம் கதறி அழுதார்.

    அந்த பெண் மனதில் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பரை வைத்துதான் போலீசார் துப்புதுலக்கி 4 பேரையும் கைது செய்து இருக்கிறார்கள்.

    கைது செய்யப்பட்டவர்களில் புருசோத்தமன், அன்பரசு ஆகியோருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனைக்குப் பிறகு இருவரும் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    முதலில் அந்த பெண்ணை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவருக்கும் இந்த வாலிபர்களுக்கும் தொடர்பு உண்டா? அவர் சுற்றி சுற்றி சென்று நடு வழியில் இறக்கிவிட்டது ஏன்? என்பது தெரியவில்லை. எனவே அவரை தேடி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்துக்கு மூலகாரணமாக விளங்கும் அந்த ஆட்டோ டிரைவரை இதில் குற்றவாளியாக அறிவித்து அவரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் கும்பகோணத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் போராடி வருகிறார்கள்.

    குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என்று வக்கீல்களும் முடிவு செய்து இருக்கிறார்கள். #kumbakonamdelhigirlmolestation

    Next Story
    ×