search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
    X

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மண்டை ஓடு அணிந்து போராட்டம் நடத்தினார்கள். #FarmerStruggle #Delhifarmerprotest

    சென்னை:

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லியில் 2 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பங்கேற்றனர்.

    அவர்கள் போராட்டம் முடிந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் அய்யாகண்ணு தலைமையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.


    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ரெயிலில் திருச்சிக்கு செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர். அதில் பாதிபேருக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகி இருந்தது. மற்றவர்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆக வில்லை. அவர்களுக்கும் டிக்கெட் கன்பார்ம் செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினோம். டெல்லியில் நிர்வாணமாக ஓடியும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். நாங்கள் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதற்கு காரணம் இருக்கிறது.

    விவசாய கடன்களை கட்ட முடியாமல் திணறிய விவசாயிகளின் வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தனர். வங்கி கடன்களை கட்டாத விவசாயிகளின் வீட்டு பெண்களை மானபங்கம் செய்ய வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் பேசினார்கள். அதனால்தான் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தினோம்.

    நாங்கள் போராட்டம் நடத்தி 1 வருடம் ஆகிவிட்டது. ஆனால் எங்களின் போராட்டத்துக்கு மோடி செவி சாய்க்க வில்லை.

    1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது ஒரு மூலைக்கும் போதாது. விவசாயிகள் மேலும் மேலும் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    புயலால் சரிந்த தென்னை மரங்களுக்கு குறைவான இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.  #FarmerStruggle #Delhifarmerprotest

    Next Story
    ×