search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கிளை செயலாளர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை- 3 பேருக்கு வலைவீச்சு
    X

    திமுக கிளை செயலாளர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை- 3 பேருக்கு வலைவீச்சு

    மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் தி.மு.க. கிளை செயலாளர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள சாத்தங்குடி புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மருதவாணன்(வயது 50). இவர், குறிச்சி ஊராட்சியில் தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், இரும்பு கம்பியால் மருதவாணனை சரமாரியாக தாக்கினர். இதில், ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து பலியானார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மருதவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மருதவாணனின் மனைவி உமா கொடுத்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாத்தங்குடியை சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த மருதவாணனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

    இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    நேற்று முன்தினம் இரவு மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச் செல்வதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடுவங்குடி பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற ஒரு டிராக்டரை மடக்கி பிடித்தனர். போலீசாரை கண்டதும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அந்த டிராக்டரில் கனகராஜ் என்று பெயர் எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மருதவாணன் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி கனகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த மருதவாணனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள கனகராஜ், ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×