search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளை அருகே அதிமுக பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி- போதகர் கைது
    X

    தோவாளை அருகே அதிமுக பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி- போதகர் கைது

    தோவாளை அருகே அதிமுக பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த போதகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    தாழக்குடி கண்டமேட்டுக் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 63). இவர் தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.

    இவரது மனைவி லதா ராமச்சந்திரன். அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். ராமச்சந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் அ.தி.மு.க. கட்சியில் உள்ளேன். மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி சென்னை தலைமை செயலகத்திற்கு செல்வது வழக்கம். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த போதகர் ஜோன்ஸ் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், பலருக்கு வேலை வாங்கிக்கொடுத்து இருப்பதாகவும், பணி இட மாறுதல் வாங்கிக்கொடுத் திருப்பதாகவும் என்னிடம் கூறினார்.

    அவரது ஆசை வார்த்தைகளை நம்பினேன். எனது மூத்த மகன் பினிலுக்கு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். அதற்காக 10 லட்சத்து 75 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டார். மேலும் எனது தங்கையின் மகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டார். பணம் வாங்கிய பிறகு ஜோன்ஸ் எந்த காரியத்தையும் செய்து தரவில்லை.

    இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன் தொடர்ந்து கேட்டதன் பேரில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை திருப்பிக் கொடுத்தார். ரூ.10 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை திருப்பித் தரவில்லை. தொடர்ந்து ஏமாற்றிவந்தார்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையிலான போலீசார் இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜோன்ஸ் பணம் வாங்கி விட்டு ஏமாற்றியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் 420 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் இன்று காலை ஜோன்சை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    Next Story
    ×