search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் விவசாயி அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
    X

    திருப்பூரில் விவசாயி அடித்துக்கொலை- போலீசார் விசாரணை

    திருப்பூரில் விவசாயி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ளது ஜி.என். பாலன் நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). விவசாயி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சுப்பிரமணியுடன் அவரது மகள் ஸ்வேதா (14) வயது வசித்து வருகிறார். ஸ்வேதா இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குவது வழக்கம். சுப்பிரமணியின் தாய் தான் காலை, மாலை சாப்பாடு சமைத்து சுப்பிரமணிக்கு கொடுப்பார்.

    இன்று காலை வழக்கம்போல் மகனுக்கு சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு சென்றார். வீட்டின் கேட்டு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த தாய் சத்தம்போட்டு அழைத்தார். பதில் எதுவும் வரவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள். சுப்பிரமணி தனியே இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரிடம் பணம், நகை அதிகம் இருக்கும் என்று நுழைந்தபோது கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×