search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதல்
    X

    தமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதல்

    தமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதலில் வட்டார பொது செயலாளர் காயம் அடைந்தார்.

    பல்லடம்:

    காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்குடன் வீடு தோறும் காங்கிரஸ் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எழுந்து வடக்கு மாவட்ட தலைவர் கோபி தன்னிச்சையாக செயல்படுகிறார் என கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத்திடமும் புகார் தெரிவித்தனர். அவர்கள் பல்லடம் பகுதியில் உள்ள பழைய நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் கோபி நியமித்து உள்ளார்.


    நீண்ட காலமாக கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து உள்ளார். புதிதாக பதவி பெற்றவர்கள் பழைய நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றனர்.

    அவர்களிடம் சஞ்சய் தத் கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    கூட்டம் முடிந்ததும் சஞ்சய் தத் புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்பி விட்டு வந்த மாவட்ட தலைவர் கோபியிடம் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.அப்போது நிர்வாகிகள் சிலர் நாற்காலிகளை தூக்கி கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கினர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த மோதலில் சென்னிமலை வட்டார காங்கிரஸ் பொது செயலாளர் பழனிசாமி காயம் அடைந்தார். தலையில் அடிபட்ட அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த மோதல் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. இது குறித்து மாவட்ட தலைவர் கோபி கூறும் போது, கட்சி பொறுப்புகளுக்காக மாவட்டம் பிரிக்கப்பட்டதில் சிலருக்கு குறைபாடுகள் இருந்தால் என்னிடம் தெரிவித்து இருக்கலாம். மாநில தலைமையிடம் அதை தெரிவித்து அவர்களது தேவையை பூர்த்தி செய்திருப்பேன். காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் த.மா.கா. சென்று வந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

    நன்கு செயல்படுபவர்களை தான் மேலிடத்தில் பரிந்துரை செய்ய முடியும் என்றார்.

    Next Story
    ×