search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும்- அமைச்சர் சர்ச்சை பேச்சு
    X

    புயல் பாதித்த பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும்- அமைச்சர் சர்ச்சை பேச்சு

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    வேதாரண்யம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மின்கம்பங்கள் நடும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

    புயலால் முற்றிலும் உருக்குலைந்து போன நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வினியோகிப்பதற்காக மின் கம்பங்கள் நடும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதன்பின்னர் வேதாரண்யத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டத்தில் பேசும் போது, ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழிற்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.


    அமைச்சரின் இந்த பேச்சை கேட்டு ஒருகணம் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

    இதை புரிந்து கொண்ட கூட்டத்தில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அது சாத்தியமில்லை. இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று கூறினார்.

    அப்போது மீண்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, ‘வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான். கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? என்ன.. என்று கேட்டார். இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவிக்கிறார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை. மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் இதேபோல் பேசியதால் மின்வாரிய அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயினர்.

    பிறகு ஒருவழியாக கூட்டம் முடியும் தருவாயில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க உடனடியாக வேலையை ஆரம்பியுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புறப்பட்டு சென்றார்.

    சர்ச்சை பேச்சால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பலமுறை விமர்சனத்துக்குள்ளானவர். தற்போது விமானம் மூலம் மின்கம்பங்கள் நடுங்கள் என்று கூறிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    Next Story
    ×