search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரல் அருகே கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை
    X

    ஏரல் அருகே கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட ரவுடியின் நண்பரும் படுகொலை

    ஏரல் அருகே ஒரே நாளில் ரவுடி மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது28). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம், ஏரல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது.

    இவரும் ஏரல் சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த தனுஷ்கோடி (30) என்பவரும் நண்பர்கள். தனுஷ்கோடியின் வீட்டிற்கு வினோத் அடிக்கடி செல்வது வழக்கம். ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக தனுஷ்கோடி சிறையில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வினோத் அடிக்கடி சென்றார். அப்போது தனுஷ்கோடியின் மனைவியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதை கணவரிடம் தனுஷ்கோடியின் மனைவி கூறினார். இதனால் வினோத் மீது தனுஷ்கோடி ஆத்திரம் அடைந்தார். மேலும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் வினோத்தை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

    தனுஷ்கோடி, வினோத் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து ஏரல் அருகே உள்ள மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் மது குடிப்பது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று வினோத் அங்கு மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனுஷ்கோடி வினோத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வினோத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் தனுஷ் கோடியுடன் சேர்ந்து மேலும் சிலரும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வினோத் கொலை தொடர்பாக நேற்று முக்கிய கொலையாளிகள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வினோத் கொலை செய்யப்பட்ட அன்று அவருடன் சேர்ந்து மது குடித்த வினோத்தின் நெருங்கிய நண்பர் ராமச்சந்திரன் (25) என்பவரையும் கும்பல் கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ராமச்சந்திரனின் சொந்த ஊர் குரும்பூர் அருகே உள்ள கள்ளம்பாறை. இவர் எப்போதும் வினோத்துடன் சுற்றி திரிவாராம். சம்பவத்தன்று வினோத்துடன் மது குடித்த போது அவரை கொலை செய்த கும்பல் தடுக்க வந்த ராமச்சந்திரனையும் கொடூரமாக கொன்றுள்ளனர். ராமச்சந்திரன் உடலை அதே பகுதியில் ஆற்றில் அமலை செடிகளுக்கு நடுவே வீசியுள்ளனர்.

    இந்த தகவலை பிடிபட்ட 2 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமச்சந்திரன் உடலை மீட்டனர்.

    கொலை நடந்து 3 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நாளில் ரவுடி மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமச்சந்திரனின் சொந்த ஊரான கள்ளம்பாறையில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வினோத், ராமச்சந்திரன் கொலை தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார்? யார்? கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எங்கே வைத்துள்ளனர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×