search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளகோவிலில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தற்கொலை
    X

    வெள்ளகோவிலில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தற்கொலை

    வெள்ளகோவில் அருகே பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Facebooklove
    வெள்ளகோவில்:

    ஈரோடு சூரம்பட்டிவலசு நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நந்தகுமார் (வயது 19). பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தி வந்தார். இவருக்கு கும்பகோணம் புளியம்பேட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரது மகள் சத்யபிரியா (21) என்பவர் அறிமுகம் ஆனார். சத்யபிரியா பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்தவர்.

    இருவரும் தங்கள் கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். போன் மூலம் பேசியபோது காதல் ஏற்பட்டது. மணிகணக்கில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க விரும்பினர். அதன்படி நாள் குறிக்கப்பட்டு சந்தித்தனர். ஒரே சந்திப்பில் இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து உடனே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. மயிலாடுதுறை டவுண் போலீஸ் நிலையத்திற்கு சத்யபிரியாவை வரவழைத்தனர்.

    அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் சத்யபிரியா தனது பெற்றோருடன் செல்வதாக எழுதி கொடுத்தார். அதன்படி பெற்றோருடன் சென்றார்.

    கணவரை பிரிந்து 4 நாட்கள் கூட இருக்க முடியாமல் தவித்தார். 4-வது நாளில் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் கணவருடன் சேர்ந்தார். பின்னர் அவர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    நந்தகுமார் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். காதல் தம்பதியின் வாழ்க்கை இனிமையாக தொடங்கியது.

    தீபாவளிவரை நந்தகுமார் அதே ஓட்டலில் வேலை செய்தார். தீபாவளி முடிந்த பின்னர் நந்தகுமார் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நந்தகுமார் மற்றொரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார்.

    நேற்று காலை அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ஓட்டல் உரிமையாளர் இரவு நந்தகுமாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது நந்தகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். அருகில் அவரது மனைவி சத்யபிரியா வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஓட்டல் உரிமையாளர் இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டை சோதனை செய்தபோது ஒரு கடிதம் சிக்கியது. அதில் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் சந்தோ‌ஷமாகவே உலகை விட்டு பிரிகிறோம். உறவினர்கள்- நண்பர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். அஞ்சலி மட்டும் செலுத்தினால்போதும் என்று எழுதப்பட்டு இருவரும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

    போலீசார் கடிதத்தை கைப்பற்றினர். தற்கொலை செய்து கொண்ட தம்பதி குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது இருவரும் மகிழ்ச்சியாவே இருந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றனர்.

    வெள்ளகோவில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து புதுமணத்தம்பதி தற்கொலை செய்ய என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #Facebooklove
    Next Story
    ×