search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்கள் முழங்க திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
    X

    அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்கள் முழங்க திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

    அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. #AnnamalaiyarTemple #MahaDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதை கண்ட பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா என கோஷ்ங்கள் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர்.
     
    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.



    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டினாலும் பக்தர்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    மலையுச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். சுமார் 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    திருவண்ணாமலை மகா தீபத்தை காண வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #AnnamalaiyarTemple #BharaniDeepam
    Next Story
    ×