search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் அருகே கல்லூரி மாணவியை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது
    X

    காங்கயம் அருகே கல்லூரி மாணவியை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது

    காங்கயம் அருகே 2-வது திருமணம் செய்வதற்கு கல்லூரி மாணவியை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள ஊதியூர் தாளக்கரையை சேர்ந்தவர் தனசேகரன்(21). பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

    மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனசேகரனுக்கும் அவரது உறவினர் பெண்ணுக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    ஆனாலும் அவர் கல்லூரி மாணவியை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இருந்தார். சம்பவத்தன்று இரவு வீடு அருகே நின்று கொண்டு இருந்த மாணவியை தனசேகரன் சந்தித்தார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு கடத்தி சென்று உள்ளார்.

    மாணவியை காணாததால் அவரது தந்தை ஊதியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாணவியுடன் தனசேகரன் ஊட்டியில் இருந்து ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    இந்த தகவல் மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் பல்லடத்தில் காத்து இருந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவியை இறக்கி விட்டு விட்டு தனசேகரன் தப்பி சென்று விட்டார்.

    அவரை மாணவியின் உறவினர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது தொடர்பாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் ரவுண்டானா அருகே தனசேகரன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தனசேகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் காங்கயம் மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தனசேகரனை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×