search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் 187 அரசு பஸ்கள் கேகே நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது
    X

    புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் 187 அரசு பஸ்கள் கேகே நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது

    புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது. #KKNagarBusdepot
    சென்னை:

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2500 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் கோயம்பேடு 100 அடி சாலை, மதுரவாயல் சாலை எப்போதும் நெரிசலுடன் காணப்படுகிறது.

    பொதுமக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்வதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. பண்டிகை காலங்களில் வாகன பெருக்கத்தால் மேலும் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலைய பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து துறையும் போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மார்க்கம் செல்லும் அனைத்து பஸ்களும் மாதவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறநகர் பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தீபாவளி பண்டிகை காலத்தில் இருந்து 400 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சற்று நெரிசல் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்க 167 விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்களும் புதுச்சேரி போக்குவரத்து கழக 20 பஸ்களும் என மொத்தம் 187 அரசு பஸ்கள் கே.கே.நகரில் இருந்து கடந்த 2 வாரமாக இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைந்துள்ளன. மேலும் ‘பீக் அவர்ஸ்’ நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரையிலான 6 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே ஒரு மணி நேரம் ஆகிறது.


    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் கிழக்கு கடற்கரை வழியாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் செல்லக்கூடிய பஸ்கள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பஸ்கள் செல்கின்றன.

    பயணிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு அதிகம் ஏற்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே இதனை வரவேற்கவில்லை. பெரும்பாலான பயணிகள் நெரிசல் இல்லாமல் விரைவாக செல்வதற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டது நல்லது என்று தெரிவிக்கின்றனர்.

    மேலும் கே.கே. நகர் பஸ் நிலையத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பஸ் வசதி அதிகம் இருப்பதால் பயணிகள் எளிதாக சென்று பயணிக்க முடியும் என்றனர். #KKNagarBusdepot
    Next Story
    ×