search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்கும்- ராமதாஸ் பேச்சு
    X

    வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்கும்- ராமதாஸ் பேச்சு

    தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சியை அமைக்கும் என்று ராமதாஸ் பேசினார். #ramadoss #pmk #tnassemblyelection

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஊடக பேரவை மற்றும் பா.ம.க. கட்சி பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு பொறுப்பு நியமன சான்றிதழை வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சியை அமைக்கும்.

    மாற்று சமுதாயத்தினரும் அன்புமணி ராமதாசை உற்றுநோக்கி அவர் மீது நம்பிக்கை வைத்து வருகின்றனர். தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் கூட பா.ம.க.வுக்கு வாக்களிப்பார்கள்.

    தற்போது பொறுப்புகள் வழங்கப்பட்ட இளைஞர்கள் ஒவ்வொருவரும் 500 வாக்குகள் வரை பெற கட்சி பணிகளில் ஈடுபட வேண்டும்.

    தருமபுரி பா.ம.க.வின் கோட்டையாகும். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது என்ற செய்தி என் காதில் விழச்செய்ய வேண்டும். குறிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகளும், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகளும், இளைஞர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இன்று காலை தருமபுரியில் உள்ள நான்கு ரோட்டில் பசுமை தாயகம் சார்பில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீசை டாக்டர் ராமதாஸ் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  #ramadoss #pmk #tnassemblyelection

    Next Story
    ×