search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் காரணமாக பெரம்பலூரில் கன மழை - சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தன
    X

    கஜா புயல் காரணமாக பெரம்பலூரில் கன மழை - சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தன

    ‘கஜா‘ புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. மழை பெய்யும் போது சூறாவளி காற்று வீசியதால் வாழைகள் சாய்ந்தன.
    பெரம்பலூர்:

    வங்கக்கடலில் உருவான ‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரையை தொட்டது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகப்பட்டினம்- வேதாரண்யம் இடையே நேற்று காலை கரையை கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கஜா புயலால் பெரம்பலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், அதன்பாதிப்பு பெரம்பலூர் பகுதியில் எதிரொலித்தது. புயலின் தாக்கத்திற்கான அறிகுறி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையே தெரிந்தது.

    அப்போதே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. கஜா புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழை விட்டு, விட்டு அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கின. தொடர்ந்து காலையில் மழை தூறிக்கொண்டிருந்தது. அவ்வப்போது சடசடவென மழையுடன் ஆரம்பித்து, சில நிமிடங்களில் நின்று போவதும், பின் மழை பெய்வதுமாக இருந்தது.

    இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழைகோட்டு அணிந்து சென்றதை காண முடிந்தது. நேற்று மதியம் வரை வானில் மேகங்கள் சூழ்ந்ததால் பகல் பொழுது இரவு போலவே இருள் சூழ்ந்து காணப்பட்டதுடன் குளிர்ந்த காற்று வீசியது. பகலில் காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் மழையில் பொதுமக்கள் குடைபிடித்தபடியே சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் போது, இடை, இடையே சூறாவளி காற்று சுழன்றடித்ததால் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் சாய்ந்து கீழே விழுந்தன.

    இந்நிலையில் பெரம்பலூர் குரும்பலூர் பகுதியை சேர்ந்த விவசாயி பால்ராஜ்(வயது 48) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் சுமார் 1½ ஏக்கர் பரப்பளவில் பூவண் ரக வாழை சாகுபடி செய்து இருந்தார். தற்போது இந்த வாழைகள் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யும்நிலையில் இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், ஏராளமான வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. சூறாவளி காற்றால் சாய்ந்த வாழைகளுக்கு அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் என விவசாயி பால்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இரவில் மழை பெய்யும் போது, இடையே மின்சாரம் தடைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேப்பந்தட்டை அருகே அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவகுடி அணையில் நேற்று பெய்த மழையால் மழைநீர் தேங்கியுள்ளது.

    வேப்பந்தட்டை மலையாளப்பட்டியில் காற்று வீசியதில் 6 மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதையடுத்து அந்தப்பகுதியில் மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, சாய்ந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

    மங்களமேடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஆய்வு செய்தார். 
    Next Story
    ×