search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைந்து 100-வது நாள் - கருணாநிதி சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
    X

    மறைந்து 100-வது நாள் - கருணாநிதி சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

    கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. #Karunanidhi #DMK #MKStalin
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி கருணாநிதியின் சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உள்பட தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.



    முன்னதாக கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி அவரது சமாதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமாதியின் மீது தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் கருணாநிதி இருப்பது போன்ற ஓவியம் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது.

    சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. முரசொலி நாளிதழ் ‘லேமினேசன்’ செய்யப்பட்டு சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.



    கருணாநிதி சமாதிக்கு நேற்று அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு, மு.க.ஸ்டாலினின் சொந்த செலவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த பணியை தி.மு.க. சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் தலைமையில் அக்கட்சியினர் மேற்கொண்டனர்.

    இதற்கிடையில், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய படத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் “நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கருணாநிதி நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு (நேற்று) 100 நாட்கள்! 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்” என தெரிவித்தார். 
    Next Story
    ×