search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி
    X

    நாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி

    நாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி இறந்தார்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள தெற்கு பால்பண்ணைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் ராஜவேல் (வயது39). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு வேம்பு (30) என்ற மனைவியும், அனுஸ்கா (7) என்ற மகளும் உள்ளனர்.

    ராஜவேல் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜவேல் கழிவறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வேம்பு, கழிவறை அருகே சென்று பார்த்தபோது ராஜவேல், அங்கு உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது தெரியவந்தது. இதனால் பதறி போன வேம்பு மற்றும் உறவினர்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ராஜவேலை மீட்டனர். அப்போது கிணற்று நீரில் மூழ்கி ராஜவேல் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×