search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டம்
    X

    பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டம்

    பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நீலகிரி கிளை சார்பில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு அறிவித்த தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும், தீபாவளிக்கான கருணை தொகையை அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை அரசு நிறைவேற்றக்கோரி ஊட்டி ராஜீவ்காந்தி ரவுண்டானா பகுதியில் பவர் ஹவுஸ் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. நீலகிரி கிளை தலைவர் பொன்னு தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம், ஊட்டி கோட்ட செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, அந்த வழியாக வந்த அரசு பஸ்சை திடீரென மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட குன்னூர் செயலாளர் ரமேஷ் உள்பட 51 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். போராட்டம் குறித்து நீலகிரி கிளை தலைவர் பொன்னு கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் ஒப்பந்த ஊழியர்கள் 133 பேர் பணிபுரிந்து வருகின்றனர். வாரியத்தில் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் குளிரையும் பொருட்படுத்தாமல் மரம் விழுந்ததில் சேதமான மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை சீரமைத்து வருகிறோம். 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 700 பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×