search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்
    X

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலபாட்டம் கிராமத்தை அடுத்த கொட்டாரத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வினோத் (வயது30). மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் வாசுதேவன் பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி- மகனை பிரிந்து மும்பை சென்று விட்டார்.

    இதனால் வருமானம் இன்றி தவித்த வாசுதேவனின் மனைவியும் எங்கோ சென்று விட்டார். இதனால் வீடு இன்றி தவித்த வினோத் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். தினமும் இரவில் பஸ் நிலையத்தில் உள்ள ஏதாவது ஒரு கடையின் முன் படுத்து தூங்குவார்.

    நேற்று இரவு இவர் மது குடித்து விட்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் மேற்கு வாசல் அருகே உள்ள கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு வந்த மர்ம கும்பல், இரும்பு கம்பியால் அவரை தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமானார்.

    இன்று காலை அந்த பகுதி வியாபாரிகள் கடையை திறக்க வந்தபோது, அங்கு வினோத் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் கிருஷ்ணசாமி, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றனர்? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத் பொதுவாக பஸ் நிலைய பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம் மிரட்டி பணத்தை அபகரித்து, மது குடிப்பதும், கஞ்சா அடிப்பதுமாக இருந்துள்ளார். அவர்களிடம் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பஸ் நிலையத்துக்கு வரும் அப்பாவி பயணிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் பஸ் நிலைய பகுதிகளில் வழக்கமாக படுத்து தூங்கும் பிச்சைக் காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத் பிச்சைக்காரர்களிடம் பணத்தை அபகரித்து மது குடித்து வந்ததால், சில பிச்சைக்காரர்களே சேர்ந்து வினோத்தை கொலை செய்து இருக்கலாமா? அல்லது அவரால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×