search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அரங்கம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X

    எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அரங்கம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அரங்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EgmoreGovernmentHospital #EdappadiPalaniswami

    சென்னை:

    எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பில் இருதய சிகிச்சை அறுவை அரங்கம், ரூ.40 லட்சம் மதிப்பில் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அமருவதற்கான நவீன ஒளி ஒலி அரங்கம், ஆய்வகம், ரூ.1 கோடி செலவில் தைராய்டு பரிசோதனை திட்டத்தை

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    பின்னர் பொன்விழா ஆண்டிற்கான நினைவு அஞ்சல் அட்டையை வெளியிட்டார்.

    இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், விளையாட்டு பொருட்கள் வழங்கினார்.

    அங்கு நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சென்னை, எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை 1968-ம் ஆண்டு 250 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 837 படுக்கைகளுடன் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவ மனையாக செயல் பட்டு வருகிறது. இம்மருத்துவ மனையில் எம்.டி. (குழந்தைகள் நலம்), எம்.சி.எச்., டி.எம் (நியோ நேடாலஜி) மற்றும் டி.சி.எச். ஆகியமருத்துவப் படிப்புகளில் ஆண்டு தோறும் 69 மாணவர்கள் படித்து பட்டம் பெற்று வருகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் தமிழ் நாட்டில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுள்ள குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, இம்மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியதோடு, 90.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புறநோயாளிகள் பிரிவுக் கட்டடத்தை கடந்த ஆண்டு கட்டித் தந்துள்ளது.

    இந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் இருதயத்துறை, ஒரு முன்னோடியான துறையாக செயல் பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் கொண்ட முதல் துறையும் இதுவே ஆகும். இம்மருத்துவ மனையில் ஆண்டு தோறும் சுமார் 12,000 குழந்தைகள் இருதய புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதயத் துறையில் உள்ள இரண்டு பிரிவுகளிலும் 20 படுக்கைகள் உள்ளன.


    இங்கு 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு இருதய உள்ளூடுருவி ஆய்வகம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 180 குழந்தைகளுக்கு இருதய உள்ளூடுருவி மூலம் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நவீன இருதய சிகிச்சை மையத்திற்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தோரண நுழைவுவாயில்; 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள நவீன இருதய சிகிச்சை அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு; இம்மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 250 நபர்கள் வரை அமர்வதற்கும், குழந்தைகளுக்கான பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகள், குழந்தைகள் கண்டுகளிக்க கார்ட்டூன் படங்கள் மற்றும் நல்லொழுக்கம் பேணும் குறும்படங்கள் ஆகியவற்றை கண்டுகளிக்கும் வகையிலும் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன ஒலி ஒளி அரங்கம்; 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்து வமனை தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்து 2018-ம் ஆண்டு பொன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொன்விழா ஆண்டு நினைவு அஞ்சல் அட்டையை வெளியிட்டு உள்ளோம்.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பிறவியிலேயே இருதய குறைபாடு உள்ள 25,285 குழந்தைகளுக்கு 191 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    பிறந்த குழந்தைகளுக்கு இன்றைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ஒரு உயர்தர மருத்துவமனையை நம் தமிழகத்திலே பெற்றிருக்கின்றோம். 837 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையாக திகழ்கின்றது. ஆகவே, இங்கே நம்முடைய ஏழை, எளிய தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஏதாவது இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்னால், சிகிச்சை பெறக் கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்கித் தந்திருக்கின்றோம்.

    அதுமட்டு மல்லாமல், பெற்றதாய்க்குத்தான் அந்தக் குழந்தையின் அருமை தெரியும். பிறந்த உடனேயே அந்தக் குழந்தை நோய் வாய்ப்பட்டால் மனம் உடைந்து விடும்.

    ஆகவே, அப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்த தாய்மார்கள் பிரசவிக்கின்ற குழந்தைகள் நலமோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அம்மாவினுடைய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நவீன கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடையக் கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இங்கு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு நலமுடன் வாழும் மழலைகள், முதல்- அமைச்சருக்கு மலர்க் கொத்து வழங்கி தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். அக்குழந்தைகளுக்கு முதல்- அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #EgmoreGovernmentHospital #EdappadiPalaniswami

    Next Story
    ×