search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானை யூனியனில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
    X

    திருவாடானை யூனியனில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

    திருவாடானை யூனியனில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு செய்தார்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுப்பது தொடர்பாக உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் தேங்கி கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை அகற்றி வருவதுடன் கொசு ஒழிப்பு மருந்துகளை தண்ணீரில் ஊற்றியும், புகை மருந்து தெளித்தும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி திருவாடானை யூனியன் பகுதியில் சுகாதார பணியாளர்கள் தீவிர டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீடுகளிலும் கொசு மருந்துகள் அடிப்பதுடன் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

    இந்த பணிகளை திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் ஆதியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடாக சென்று வீடுகளில் உடைந்த பாத்திரங்கள், பாட்டில்கள், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், மாட்டு தொட்டிகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்கி கிடந்ததை உடனே அகற்றியதுடன் அங்குள்ள வீடுகளிலும், வீடுகளை சுற்றிலும் கழிவு பொருட்கள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:- காய்ச்சலை தடுக்க தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் கடைகளிலோ, தனி நபர்களிடமோ மாத்திரைகள் வாங்கி சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடம் உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும். வீடுகளின் மேல்மாடிகளில் கழிவு பொருட்களை போட வேண்டாம்.

    தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை அதனை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்துகள் தெளிக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் வீடுகளில் சேமித்து வைக்கும் நல்ல தண்ணீரிலேயே உற்பத்தியாகிறது. இதனால் மஸ்தூர் பணியாளர்கள் தங்களது வீடுகளுக்கு மருந்து ஊற்ற வரும் நேரத்தில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அவருடன் சுகாதார ஆய்வாளர் சந்தனராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் ஜோதிகுமார் ஆகியோர் சென்றனர். 
    Next Story
    ×