search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்றிக்காய்ச்சல் பாதிப்பு - அச்சக தொழிலாளி பலி
    X

    பன்றிக்காய்ச்சல் பாதிப்பு - அச்சக தொழிலாளி பலி

    பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான சிவகாசி அச்சக தொழிலாளி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகாசி:

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் அருள் (வயது 32). இவர் சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு பிரேமா என்கிற கார்த்திகா என்ற மனைவியும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் திருத்தங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் அச்சக தொழிலாளி அருளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், கடுமையான காய்ச்சல் இருப்பதால் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு காய்ச்சலின் தன்மை குறித்து அறிந்து கொள்ள வற்புறுத்தி உள்ளனர். அதன் பேரில் அருள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்து தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அருளுக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் அவர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் நகராட்சி சுகாதார அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் காலனியில் உள்ள வேலவன் நகர் பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள மக்களிடம் பன்றிக்காய்ச்சல் நோய் பரவும் விதத்தையும், தடுப்பு முறைகளையும் விளக்கினர். தொழிலாளி ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நோய் பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து நகராட்சி கமிஷனர் சுவாமி நாதன் கூறியதாவது:-

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 55 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளில் 6 நாட்களுக்கு ஒரு முறை கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படுகிறது. அதேபோல் கழிவுநீர் செல்லும் வாருகால்களை சுற்றி 15 நாட்களுக்கு ஒரு முறை கொசுபுழு உற்பத்தியை தடுக்கும் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால் இங்கு டெங்கு பாதிப்பு இல்லை.

    பன்றிக்காய்ச்சலால் அச்சக தொழிலாளி ஒருவர் இறந்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் ஆய்வு செய்தோம். அந்த வாலிபர் உசிலம்பட்டி சென்று இருந்த போது அங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இறந்த அருளின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

    திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் செண்பகாதேவி கூறியதாவது:-

    திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாதாரண காய்ச்சல் காரணமாக தான் சிலர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். மற்றபடி டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புக்கு யாரும் சிகிச்சை பெற வில்லை. நோய் பாதிப்பு இருந்தால் அவர்கள் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அதற்கான அனைத்து வசதிகளும் ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ளது. தற்போது 3 படுகைகள் அந்த தனி வார்டில் உள்ளது. ஆனால் யாரும் பன்றிக்காச்ச்சல் மற்றும் டெங்கு நோய்க்கு இங்கு தங்கி சிகிச்சை பெற வில்லை என்றார்.

    சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ் கூறியதாவது:-

    சிவகாசி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 12 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் திருத்தங்கல் பகுதியில் முத்துலட்சுமி, அருள் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்துள்ளனர். மற்றவர்கள் நோயின் பிடியில் இருந்து மீண்டு வருகிறார்கள். தற்போது ராஜபாளையத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். வேறு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் தாலுகா அளவிலான அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு மருந்துகள் உள்ளது. தனி வார்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
    Next Story
    ×