search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    X

    ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

    தொட்டகாஜனூரில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிக்கு மெட்டல்வாடி ரோட்டோரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த குடிநீர் தொட்டியின் கீழ் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தொட்டகாஜனூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு அடைவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதேபோல் தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவுகிறது. இதேபோல் அந்த குடிநீர் தொட்டியின் அருகில்தான் அங்கன்வாடி மையம், மக்கள் நலவாழ்வு மையமும் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையம் செல்லும் குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.

    அதனால் மெட்டல்வாடி ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைக்க வேண்டும். மேலும் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    Next Story
    ×