search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக சாலை மறியல்
    X

    திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக சாலை மறியல்

    திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். 800 பெண்கள் உள்பட 900 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-வது நாளாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் அவர்கள் திருவண்ணாமலை போளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மறியல் போராட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. போக்குவரத்து பாதிக்காத வகையில் போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.

    அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மட்டும் வழிவிடுங்கள் என்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண் சத்துணவு ஊழியர்களிடம் போலீசார் கூறினர். அப்போது அந்த பெண்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட முடியாது என்று கூறினர். யாரேனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பார்கள், ஆம்புலன்ஸ் அவசரமாக செல்ல வேண்டி இருக்கும் அதனால் வழிவிடுங்கள் என்று போலீசார் கூறினர்.

    இதையடுத்து போலீசார் சத்துணவு ஊழியர்களை எழுப்பி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி அமைத்து கொடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மறியல் போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, செல்வி ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். மறியலில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 900 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×