search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட சிறுவனை படத்தில் காணலாம்.
    X
    மீட்கப்பட்ட சிறுவனை படத்தில் காணலாம்.

    புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு - தாய், மகள் கைது

    சென்னையில் கடத்தப்பட்ட சிறுவனை புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தாய், மகளை போலீசார் கைது செய்தனர். #BoyRescue
    சென்னை:

    புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி துர்காதேவி. இந்த தம்பதிக்கு அஜய் (வயது 3) என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். அஜய் அருகில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் படித்து வருகிறான். அஜயை வழக்கமாக பிரகாஷ் பள்ளியில் விட்டு விட்டு பின்னர் அழைத்து வருவார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுவதற்கு சற்று முன்கூட்டியே ஆசிரியை மேனகாவிடம் 2 பெண்கள் சென்று தங்களை அஜய் உறவினர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் தங்களுடன் சிறுவனை அனுப்பி வைக்குமாறு கேட்டனர். உடனே ஆசிரியை மேனகா, துர்காதேவிக்கு போன் செய்து விசாரித்தார். தனது கணவர் சார்பில் யாரேனும் வந்திருப்பார்கள் என நம்பி அஜயை அவர்களுடன் அனுப்பி வைக்குமாறு துர்காதேவி கூறினார்.

    பள்ளியை விட்டு அஜய் வீட்டுக்கு வராததால் அங்கு சென்று அவனுடைய பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் அஜய் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மாலை 6 மணிக்கு புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கண்காணிப்பு கேமராவில் அஜயை 2 பெண்கள் தூக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    சிறுவனை பெண்கள் கடத்தி சென்ற போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.


    இது குறித்து அஜய் பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், அந்த பெண்களில் ஒருவர் தங்களுக்கு தெரிந்தவர் என்றும், 2013-ம் ஆண்டு வீடு கட்டும் போது கட்டுமான பணியில் அந்த பெண் ஈடுபட்டார் என்றும் தெரிவித்தனர்.

    அதை வைத்து அந்த பெண்ணின் முகவரியை போலீசார் கண்டறிந்தனர். மேலும் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். விசாரணையில் வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் சிறுவன் அஜய் இருப்பது தெரியவந்தது. உடனே சிறுவனை போலீசார் மீட்டனர்.

    இது குறித்து போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    சிறுவனை கடத்திய பெண் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியை சேர்ந்த குட்டியம்மா (38) ஆவார். அவருடன் வந்தவர் ஓட்டேரியில் வசிக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா (20). ஓட்டேரியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுக்க விரும்புவதாகவும், அதற்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் குட்டியம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் குழந்தையை கடத்தி அந்த பெண்ணிடம் கொடுத்தால் தனக்கு பணம் கிடைக்கும் என்றும், அதை வைத்து தனது மகளுக்கு சீர்வரிசை செய்யலாம் என்றும் குட்டியம்மா முடிவு செய்து அஜயை கடத்தி உள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட குட்டியம்மா, ஐஸ்வர்யாவை போலீசார் கைது செய்தனர். 6 மணிக்கு சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்தனர். நள்ளிரவு 1 மணிக்கு சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்தப்பட்ட சிறுவனை புகார் தெரிவித்த 7 மணி நேரத்தில் மீட்ட இன்ஸ்பெக்டர் ரவி காலில் விழுந்து துர்காதேவி நன்றி தெரிவித்தார். #BoyRescue

    Next Story
    ×