search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம காய்ச்சலால் இறந்த ஜெனதா மற்றும் ஒன்றரை வயது குழந்தை பவித்ரா.
    X
    மர்ம காய்ச்சலால் இறந்த ஜெனதா மற்றும் ஒன்றரை வயது குழந்தை பவித்ரா.

    நெல்லை, தூத்துக்குடியில் மக்களை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல் - வள்ளியூரில் குழந்தை, பெண் பலி

    வள்ளியூரில் குழந்தை, பெண் பலியான சம்பவத்தையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ப‌ட்டு வருகின்றன.
    வள்ளியூர்:

    சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகள் காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் குறித்த பீதி அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றாற் போல அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக பல்வேறு வகையிலான காய்ச்சல் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சலின் தீவிரத்தை பொறுத்து சிலர் உள்நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ள‌னர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகலில் வெயிலும், மாலையில் மழையும் என மாறி மாறி காணப்படுவதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட சீசன் நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி கர்ப்பிணி பெண் சாந்தினி(வயது 26) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் வள்ளியூர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகையா (வயது 37), லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயராணி (35). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவித்ரா என்ற பெண்குழந்தை உள்ளது. ஜெயராணி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை பவித்ராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ஏர்வாடி, வெள்ளமடம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆனாலும் பவித்ராவுக்கு காய்ச்சல் குறையவில்லை.

    பின்னர் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து வள்ளியூரில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாக கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவ குழுக்களும் வள்ளியூரில் முகாமிட்டுள்ளன.

    ஏற்கனவே கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த சந்தியாகு என்பவருடைய மனைவி ஜெனதா (47). இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெனதா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜெனதாவின் உடல், இடிந்தகரைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சிங்கை மற்றும் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சிங்கை மற்றும் அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏராளமானோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். வெளிநோயாளிகளாக அனைவரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மர்மகாய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதால் பொது சுகாதாரத்துறை கொசு ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோருக்கு உடனடியாக டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளதா எனக் கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ப‌ட்டு வருகின்றன. 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி, கிராம பகுதியில் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள‌னர். கலெக்டர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தினந்தோறும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால கர்ப்பிணி பெண் பலியான முள்ளக்காடு பகுதியில் சுகாதார குழுவினர் முகாமிட்டுள்ளனர்.



    Next Story
    ×