search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்
    X

    தஞ்சையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

    தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதிய சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளருக்கு பணிக்கொடையாக ஒட்டு மொத்த தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    விலைவாசி உயர்வுக்கேற்ப மாணவர்களுக்கான உணவூட்ட செலவுத் தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதிவாய்ந்த சமையல் உதவியாளர்களுக்கு அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலை நகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி முதல் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து 3 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களது போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காததால் அவர்களை கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

    இதைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறி இன்று காலை தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 150 பெண்கள் உள்பட 175 பேர் திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தஞ்சை நகர டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று முதல் பள்ளிகளில் மாணவ ர்களுக்கு சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியைகள், பணியாளர்கள் சமையல் செய்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    Next Story
    ×